நள்ளிரவு காற்று...
விஷ்ணுபுரம் சரவணன்
Thursday, April 28, 2011
சுற்றுலா தேசம்தான்..

.
நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும்
வீதியில்தான்
குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்தது
நீங்கள் நடங்கள்
நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான்
போராளி ஒருத்தியை
நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புனர்ந்தார்கள்
நீங்கள் நடங்கள்
நீங்கள் இப்போது கால் நனைக்கும் கடற்கரையில்தான்
படகில் தப்பியோடமுயன்ற
நிறைசூல் பெண் ஒருத்திசுடப்பட்டு இறந்துபோனாள்
கூடவே அவளோடு...
நீங்கள் நடங்கள்
நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான்
மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல்
கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந்தான்
போராளி ஒருவன்
நீங்கள் நடங்கள்
நீங்கள் இப்போது ஓய்வெடுக்குமிடம்
அகதிமுகாமியிருந்தபோது நீர்பிடிக்கவும் மகனுக்காவும்
வரிசையில் காத்திருந்த
முதியவர் ஒருவர் சுருண்டுவிழுந்து இறந்தார்
நீங்கள் ஓய்வெடுங்கள்
நாளை வேறொரு பகுதிக்கு செல்லலாம்
ஆமாம்
இப்போது இந்நாட்டின் எல்லாபகுதிகளுக்கும் செல்லலாம்
சுற்றுலா தேசமிது
ஆயினும்
சுற்றிகாட்டவும் சொல்லிகாட்டவும்
இக்கதைகள் மாத்திரமே உலவுவதற்கு
நான் ஏதும் செய்வதற்கில்லை.
.
.இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கும் கவிதை
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 12:37 AM 5 COMMENTS
5 Comments:
பொத்துக்கொண்டு வருகிறது சரவணன்.
yes
இது உங்கள் படைப்பா சரவணன்?
ஈழப் படுகொலையின் ரத்த சாட்சியாகத் திகழும் இந்தக் கவிதையின்
வீச்சும் விளைவும் நீண்டகாலம் நிற்கும்.
செயல்படத்தூண்டும்..
எழுதுவது அல்ல, எழுப்புவதே எழுத்து என்பதற்கு இந்தப்படைப்பே சரியான உதாரணம்.
நண்பர் வி.சி.வில்வம் இதை எனக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி,
உங்கள் படைப்பு வெல்லும்.
உங்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கமும்.
நா.முத்துநிலவன்
புதுக்கோட்டை – 622 004
முகநூல் வழியேயும் தொலைபேசி வழியேயும் இந்த கவிதை குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. தோழர் பாமரனும் அவரது மனைவியும் பேசியபோது நெகிழ்ந்தே போனேன். அந்த அன்பு அத்தனை இயல்பானது. ஏதோ ஒரு கிராமத்தில் எழுதிக்கொண்டிருக்கும் என்னை யார் கவனிக்கப்போகிறார்கள் எனும் என் எண்ணத்தை மாற்றிபோட்டிருக்கிறது இந்த பகிரல்கள். இவை என்னை கூடுதல் நம்பிக்கையோடு எழுதவைக்கும் எனும் நம்புகிறேன். கவின்மலர் துவங்கி அத்தனை நண்பர்களும் மீண்டும் நன்றி.
உங்கள் படைப்பு வெல்லும்.கனக்கவைக்கும் பகிர்வு
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home